காலையில் எழுந்து குளித்து ஊதுபத்தி ஏற்றி சுலோகங்கள் கூறி சாமி கும்பிட்டாச்சு. இன்னைக்கு அமாவாசை அதனால் நான் சுத்த சைவம். அசைவம் சாப்பிட மாட்டேன். இந்த டயலாக் கேட்காத வீடு இருக்காது. (நான் கூறுவது அசைவப் பிரியர்களின் வீடுகளில்)
ஆனால் காலையில் எழுந்ததும் குளித்தோமே? சோப் போட்டுதான்.
அந்த சோப்பில் என்ன கலந்திருக்கிறது என்று யோசித்ததுண்டா?
என்ன கலந்திருக்க போகிறது வாசனை திரவியமும் சில கெமிக்கலும் தான் என்று கூறிவிடலாம்.
ஆனால் அதில் அதிக அளவில் கலந்திருக்கும் மிருகக் கொழுப்பு பற்றி நிறையப் பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சில சோப்புகளில் மிருகக் கொழுப்பிற்கு பதிலாக காய்கறி எண்ணெய் பயன்படுத்துகிறார்கள். ஆனால் காய்கறி எண்ணெய்யை விட மிருக கொழுப்பு மிகவும் மலிவாக கிடைக்கிறது. இதனால் சோப் தயாரிப்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. எனவே பெரும்பாலானா சோப்புகளில் மிருக கொழுப்பே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சில சோப்புகளின் கவரில் இது காய்கறி எண்ணெய்யில் தயாரிக்கப்பட்டது என்று அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் அதை எவ்வளவு நிச்சயமாக நாம் நம்புவது.
இதனுடைய அளவு சோப்பின் கவரில் TFM (Total Fatty Matter) எத்தனை சதவீதம் என்று அச்சிடப்பட்டிருக்கும். இதனுடைய அளவு 70 சதவீதத்தை தாண்டியிருந்தால் நல்ல சோப் என்று கருதுகிறார்கள்.
ஆனால் மிருக கொழுப்பா? அல்லது காய்கறி எண்ணெய்யில் தயாரித்ததா? என்பது பற்றியான தகவல்கள் பெரும்பாலான சோப்புகளின் கவர்களில் இல்லை.